சேமமடு
சேமமடு என்றழைக்கப்படும் இந்த அழகிய கிராமம் வன்னிமாவட்டத்தின் வடக்குப் பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்டது. வவுனியா நகரத்திலிருந்து சுமார் 15 மைல் தொலைவில் வடகிழக்குப் பக்கமாக அமைந்துள்ளது. இது 1956 ம் ஆண்டு அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதோர் குடியேற்றத்திட்டமாகும். இக்குடியேற்றத்திட்டம் முதலாம் படிவம் இரண்டாம் படிவம் என இரண்டு பெரும் பிரிவுகளைக்கொண்டது. ஒவ்வோர் படிவத்திலும் நூறு நூறு வீடுகளாக இருநூறு குடும்பங்கள் இங்கே குடியமர்த்தப்பட்டார்கள். உபஉணவுப் பயிற்ச்செய்கை மேற்கொள்ள இரண்டு ஏக்கர் வளவு காணிகளும், நெற்செய்கை மேற்கொள்வதற்காக மூன்று ஏக்கர் வயல்காணிகளும் ஒவ்வோர் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது. இருநூறு குடும்பங்களுக்குரிய 600 ஏக்கர் வயல் நிலத்திற்கும் நீர் பாய்ச்சக்கூடியதான ஓர் பெரிய நீர்த்தேக்கமும் அமைக்கப்பட்டது. இச்சேமமடுக்குளத்தின் அண்மையாகவுள்ள ஆதிக்கிராமங்களாகிய இளமருதங்குளம், பரசங்குளம், வாரியூர், மாறாயிலுப்பை, வேடங்குளம், ஆலங்குளம், இன்னும் மறைந்து அழிந்துபோய் காடாகிய சிற்றூர் முறிகுளங்களினின்றும், சிற்றாறுகளாய் வந்து சேரும் நீரினைமறித்தே இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. வடமாகாணத்திலுள்ள பேராறு என்றழைக்கப்படும் கனகராயனாறு இக்குளத்தின் வான்பகுதியிலிருந்தே உற்பத்தியாகி இரணைமடுக்குளத்தை நிறைத்து கிளிநொச்சி மாவட்டத்தைப் பசுமையாக்கிச் செழிப்பாக்குகின்றது. இக்கிராமத்தின் வடக்கே சம்மளம்குளம் கிராமமும், கிழக்கே அடர்ந்த காட்டுப்பிரதேசமும், தெற்கே இளமருதங்குளம் என்னும் ஊரும், மேற்கே மாளிகை என்றழைக்கப்படும் மகிமைகளையும், மர்மங்களையும் தன்னுள்ளே புதைத்து வைத்துள்ள கிராமமும் அமைந்துள்ளது. சேமமடுவின் முதலாம் படிவத்தினருகே 1972 ம் ஆண்டு உப உணவு உற்பத்திக்காக இவ்விரண்டு ஏக்கர் மேட்டுக்காணி இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்டது. அதுவே பின் வினாயகபுரமெனப் பெயரிடப்பட்டு அங்கு மக்கள் குடியேறினர். இதேபோன்றே சேமமடுவின் இரண்டாம் படிவத்தினருகே காஞ்சுரங்குளம் என்னும் கிராமம் பின்நாளில் உருவாகியுள்ளது. இது தவிர இங்குள்ள பலர் ஆராய்ச்சிகுளம் என்னும் ஆதிகாலக் குளத்தின் கீழும் காடுகள் வெட்டிப் பயிர் செய்து வந்தனர். இக்கிராமத்தின் மேற்குத்திக்கின் ஓர்பகுதியில் தவளைக்கல்லுச்சோலை என்றழைக்கப்படும் ஒர்அதிசயமானபகுதியுள்ளது. இங்கே பெரும் மாளிகைகள் இருந்ததற்கான அடையாளங்களாக பெரும் நீண்ட கருங்கற்தூண்களும், அழிந்துபட்ட மண்மண்டிய மேடுகளுமாகக் காட்சிதருகின்றது. இதிலிருந்து ஏதோஓர்காலத்தில் இப்பகுதி பெரிய நகரமாய் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணத்தோன்றுகின்றது. இதுசம்பந்தமான கர்ணபரம்பரைக்கதைகளை அயலிலுள்ள ஆதிக்கிராமங்களில் வாழ்ந்த முதியோர்கள் கூறுவார்கள். கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும், அதிசயமாகவும் இருக்கும். சேமமடு என்னும் பெயரிற்கு ஏற்றாற்போல் மிகவும் சேமமான பகுதியாகவும், அங்குவாழ்ந்த இளைஞர்கள் முற்போக்குச் சிந்தனையுடனும், ஓற்றுமையுணர்வுடனம், உறுதியான செயற்பாட்டுடனும், கலை கலாச்சார விழுமியங்களைப் பேணுபவர்களாகவும், கிராமாபிரித்திக்கான சிரமதானப்பணிகள், கோவில் திருப்பணிகள், விளையாட்டுக்கள், கலைவிழாக்கள் போன்றவற்றைத் திறம்பட நடாத்தி ஏனைய கிராமத்தவர்கள் பிரமிப்புடனும், வியப்புடனும் நோக்கும் வண்ணம் எடுத்துக்காட்டான இளைஞர்களாக வலம்வந்தார்கள். சேமமடுவின் முதலாம் படிவத்தில் 10 ம் வகுப்புவரை கல்வி கற்பிக்கப்படுகின்ற ஓர் பாடசாலையாயிருந்தது. தற்போது இப்பாடசாலை தரமுயர்த்தப்பட்டு, சண்முகானந்தவித்தியாலயம் எனப் பெயர் சூட்டப்பட்டு கல்விப் பொதுத் தராதர (உயர்தர) வகுப்புவரை கல்வி கற்பிக்கப்படுகின்றது. இப்பாடசாலையில் ஆரம்பக்கல்வியைப் பயின்ற பலர் இன்று பேராசிரியர்களாகவும், ஆசிரியர்களாகவும், அரசஉயரதிகாரிகளாகவும் சொந்தநாட்டிலும், பல்வேறுநாடுகளிலும்; பணிபுரிகின்றார்கள். இரண்டாம் படிவத்தில் ஐந்தாம் வகுப்புவரை கல்வி கற்கக்கூடிய ஓர் ஆரம்பப் பாடசாலையும் உண்டு. இரண்டு படிவங்களிலும் ஒவ்வோர் பலநோக்குக்கூட்டுறவுச்சங்கங்களும் உண்டு. சேமமடுவின் முதலாம் படிவத்தில் சேமமடுக்குளத்தின் வான்பகுதியில் உயர்ந்து பரந்துவிரிந்த மேட்டுப்பகுதியில் ஆதிவினாயகர் ஆலயம் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. இங்கே கோவில்கொண்டு அருள்பாலிக்கும் ஆதிவினாயகர் இங்குள்ளவர்களின் நம்பிக்கைக்குரிய குலதெய்வமாய் விளங்குகிறார். இத்துடன் வினாயகபுரத்துடன் அண்டியபகுதியில் நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ளது. இதுவும் இங்குள்ளவர்களின் நம்பிக்கைக்குரிய தெய்வமாய், விசசெந்துக்களினின்றும் மக்களைக் காப்பாற்றும் கடவுளாய், நோய்நொடிகள் மாற்றும் தலமாய் இங்குள்ளவர்களால் பேற்றப்படுகின்றது. சேமமடுவின் இரண்டாம் படிவத்திலும் இரண்டு வினாயகர் ஆலயங்கள் உள்ளன. ஆட்காட்டிப்பிள்ளையாரென மக்களால் அழைக்கப்படும் பிள்ளையார் அதிசக்திவாய்ந்த வினாயகராக மக்களால் போற்றப்படுகின்றார். மங்களப் புலவுப் பிள்ளையாரென அழைக்கப்படும் வினாயகப் பெருமானும் மகிமை பொருந்திய பிள்ளையாராக வணங்கப்படுகின்றார். இதனைத்தவிர அங்கே ஓர் கத்தோலிக்க தேவாலயமும் உள்ளது. இங்கே ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் விசேட ஆராதனைகள் நடைபெற்றுவந்தன. நாட்டிலேயேற்பட்ட போர்ச்சூழலிலே, சூரியக்கதிரென்ற போர்நடவடிக்கையோடு இடம்பெயர்ந்த மக்கள் நாட்டிலும், உலகத்திலும் சிதறி வாழ்கின்றார்கள். தற்போது போர்ஓய்ந்த நிலையிலே சிலர் தாம் பிறந்து வாழ்ந்த மண்ணின் பாசத்தால் திரும்பவும் குடியேறிவருகின்றார்கள். புலம்பெயர்ந்து வாழும் பலர் தம்தாய்க் கிராமங்களின் நினைவுகளைச்சுமந்து அங்கு குடியேறும் தம் உறவுகளுக்கு உதவிகள் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் இந்த நன்முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம். |